பிரபல நடிகை ஒருவர், நான் விஜய் சேதுபதி படத்தில் நடிக்கவில்லை என கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2, ட்ரெயின் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் தலைவன் தலைவி, காந்தி டாக்ஸ் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் ஏஸ் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதன் பின்னர் விஜய் சேதுபதி, பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கும் எனவும் இப்படத்தில் நடிகை தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார எனவும் சொல்லப்படுகிறது. இப்படமானது பான் இந்திய அளவில் உருவாக இருக்கிறது. அதேசமயம் இப்படத்தில் நடிகை ராதிகா ஆப்தே கதாநாயகியாக நடிக்க உள்ளார் எனவும் தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை நடிகை ராதிகா ஆப்தே மறுத்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர், “இந்த செய்தி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் இந்த படத்தில் நடிக்கவில்லை. இந்த தகவல் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் படத்தில் யார் கதாநாயகியாக நடிக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.