ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் ஆமீர்கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் ரஜினி கடந்தாண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைத்தொடர்ந்து இவர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அதே சமயம் நடிகர் ரஜினி கூலி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரஜினியின் 171 வது படமான இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா மற்றும் கன்னட நடிகை ரச்சிதா ராம் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான் கூலி திரைப்படத்தில் கேமியோ ரோலில் தோன்ற இருப்பதாக புதிய தகவல் கிடைத்துள்ளது.
ஏற்கனவே பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ரன்வீர் சிங் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் தற்போது ஆமர் கான் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் கூலி திரைப்படத்தில் எந்த பாலிவுட் நடிகர் நடிக்கப் போகிறார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஐதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.