எம்புரான் திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு சொந்தமான சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் 6 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர் .
மோகன்லால் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘லூசிபர்’ படத்தின் 2-ம் பாகமாக உருவான ‘எல் 2 எம்புரான்’ கடந்த 27-ம் தேதி வெளியானது. மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிவேகமாக ரூ. 100 கோடி வசூல் செய்த மலையாள படம் என்ற புதிய சாதனையை ‘எல் 2 எம்புரான்’ படைத்திருக்கிறது. இதுவரை ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இந்த படத்தில் ஒரு சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்ட நிலையில் படக்குழு அதற்காக 17 இடங்களில் காட்சிகள் நீக்கி மொத்தமாக 3 நிமிட காட்சிகளை படத்தில் இருந்து எடுத்தனர். நடிகர் மோகன்லாலும் இதற்கு வருத்தம் தெரிவித்து தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், எம்புரான் பட தயாரிப்பாளருக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படம் மறைமுகமாக பாஜகவை விமர்சனம் செய்வதாக பாஜகவினர் விமர்சனம் செய்து வந்த நிலையில் இத்திரைப்படத்தை தயாரித்த
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் சிட் பண்ட் நிறுவனத்தில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.