நடிகர் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருக்கிறார்.
ஏற்கனவே சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் விருதுகளை அள்ளி சாதனை படைத்தது.

இந்நிலையில் சுதா கொங்கரா, சூர்யா கூட்டணியில் உருவாகும் இந்த புறநானூறு திரைப்படத்திற்கு அதிக அளவில் எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதற்கிடையில் அறிவிப்பு வீடியோவை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதில் போராட்டம், எதிர்ப்பு, அரசியல், மக்கள் கூட்டம் போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏற்கனவே இப்படம் இந்தி எதிர்ப்பு சம்பந்தமான கதைக்களத்தில் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. அதன்படி புறநானூறு திரைப்படத்தில் நடிகர் சூர்யா இந்தி திணிப்புக்கு எதிராக போராடும் கல்லூரி மாணவனாக நடிக்கிறார் என்று தெரியவந்துள்ளது. மேலும் கல்லூரி மாணவன் கதாபாத்திரத்தில் நடிப்பதால் நடிகர் சூர்யா உடல் எடையை குறைப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது. சில்லுனு ஒரு காதல், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு நீண்ட வருடங்கள் கழித்து கல்லூரி மாணவனாக புறநானூறு படத்தில் நடிக்க இருக்கிறார்.
கங்குவா திரைப்படத்தில் ஏற்பட்ட விபத்தில் சிறிது நாட்கள் ஓய்வில் இருக்கும் சூர்யா விரைவில் புறநானூறு படப்பிடிப்பில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தை சூர்யாவின் 2D என்டர்டயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். இதில் சூர்யாவுடன் இணைந்து துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.