நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிப்பில் கடைசியாக புஷ்பா திரைப்படம் வெளியானது. புஷ்பா தி ரைஸ் என்ற தலைப்பிடப்பட்டுள்ள இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் (புஷ்பா தி ரூல்) என்ற தலைப்பிடப்பட்டுள்ள புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 2024 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக இருக்கிறது.
அதேசமயம் இயக்குனர் நெல்சன் கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு பிறகு விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை என்பதால் அடுத்ததாக தரமான கம்பேக் கொடுக்க வேண்டும் என ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். அடுத்ததாக நெல்சன் யாரை வைத்து படம் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் தான் நெல்சன் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் அல்லு அர்ஜுனை இயக்கப் போவதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்திற்கு பிறகு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அதே சமயம் நெல்சன் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார் அல்லு அர்ஜுன்.
இந்த இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கப் போகிறது என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.