புஷ்பா 2 திரைப்படம் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஒத்திவைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2004இல் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வெளியான படம் ஆர்யா. 2009 இல் ஆர்யா 2 திரைப்படத்தையும் இயக்கியிருந்தார் சுகுமார். இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு மீண்டும் சுகுமார், அல்லு அர்ஜுன் கூட்டணி புஷ்பா தி ரைஸ் திரைப்படத்தில் இணைந்தது. செம்மரக்கட்டை கடத்தல் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் இந்திய அளவில் பிரபலமாகி அதிக வசூலை வாரி குவித்தது. அதைத் தொடர்ந்து புஷ்பா 2 – தி ரூல் எனும் படமும் சுகுமார், அல்லு அர்ஜுன் கூட்டணியில் தயாராகி வருகிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி படத்தின் டீசர் மற்றும் முதல் இரண்டு பாடல்களும் வெளியான நிலையில் அதனை ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர். அதே சமயம் இந்த படமானது ஆகஸ்ட் 15 வெளியாகும் என்று படக்குழுவினர் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
எனவே படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தற்போது கிடைத்த தகவல் ரசிகர்களுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது புஷ்பா 2 படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளதால் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து படமானது ஒத்திவைக்கப்படும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் படக்குழுவினர் சார்பில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.