‘தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி சென்னையில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரின் இறப்பிற்கு மரியாதை செலுத்தும் வகையில் நேற்று சென்னை காமராஜர் அரங்கத்தில், நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சந்திரசேகர், ராதாரவி, சரத்குமார், ஜெயம் ரவி, ரஜினி, கமல் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அனைவரும் கேப்டன் விஜயகாந்த் குறித்து நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி , கேப்டன் விஜயகாந்த் குறித்து மேடையில் பேசுகையில், “சத்ரியனுக்கு சாவே கிடையாது என்ற கேப்டன் விஜயகாந்தின் வசனத்தை இந்த இடத்தில் சொல்ல வேண்டியள்ளது. பள்ளி பாடப் புத்தகத்தில் விஜயகாந்த் குறித்து இடம்பெற வேண்டும். ஒரு நல்ல மனிதர் எப்படி வாழ வேண்டும் என்பதே அந்தப் பாடமாக இருக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.
கேப்டன் விஜயகாந்த், திரைப்படங்களில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வாழ்ந்தவர் என்பதே உண்மை. தன்னலம் கருதாத பொது நலவாதியாக வாழ்ந்து மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மறைவு இன்று வரையிலும் தமிழக மக்களை மீள முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.