கடந்த ஒரு வார காலமாக சமூக வலைத்தளங்களை பூகம்பமாய் அதிர வைத்துள்ள சம்பவம் என்னவென்றால் மன்சூர் அலிகான் திரிஷாவை பற்றி பேசிய சர்ச்சை பேச்சு மற்றும் அதற்கான நடவடிக்கைகளும் தான். மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் சங்கம் வலியுறுத்தியது. ஆனால் மன்சூர் அலிகான் தான் எதையும் தவறாக கூறவில்லை என தொடர்ந்து பேசி வந்தார். இது சம்பந்தமாக நடிகர் சங்கம் என்னிடம் விசாரிக்காமல் முடிவெடுத்து விட்டது என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்திருந்தார். பல அமைப்புகள் மன்சூர் அலிகானின் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்தும் கூட போய் பொழப்ப பாருங்க என்றெல்லாம் கூட பதிலளித்தார். இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிய டிஜிபிக்கு உத்தரவிட்டது. டிஜிபி சங்கர் ஜிவாலின் உத்தரவின்படி சென்னை மாநகர கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நடவடிக்கையால் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் இரு பிரிவுகளில் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அடுத்த கட்டமாக என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உயர் அதிகாரிகளால் ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மன்சூர் அலிகான் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் சம்மன் அனுப்பியது. நுங்கம்பாக்கத்தில் உள்ள மன்சூர் அலிகான் இல்லத்தில் அவரது மனைவியிடம் இந்த சம்மன் ஒப்படைக்கப்பட்டது.இந்த சம்மனை ஏற்றுக் கொண்ட மன்சூர் அலிகான் இன்று காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக உள்ளார். மேலும் இந்த வழக்கின் காரணமாக மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
- Advertisement -