நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியான நிலையில் அடுத்தது குபேரா மற்றும் இட்லி கடை போன்ற படங்கள் உருவாகி வருகிறது. அதே சமயம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர், லால் சலாம் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருப்பினும் இவர்கள் இருவரும் கடந்து சில வருடங்களாகவே பிரிந்து வாழும் நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் தங்களின் திருமண உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்தனர். அதைத்தொடர்ந்து இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தனர். இது தொடர்பான வழக்கு மூன்று முறை விசாரணைக்கு வந்த நிலையில் மூன்று முறையுமே தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதன்மூலம் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ விரும்புவதாக சமூக வலைதளங்கள் செய்திகள் பரவி வந்தது. தற்போது இதனை உறுதி செய்யும் விதமாக போயஸ் கார்டனில் ரஜினி வீட்டில் வைத்து தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் ரகசியமாக சந்தித்துள்ளனர் என புதிய தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் இந்த சந்திப்பில், ரஜினியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ முடிவெடுத்துள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் கூறுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.