பிரபலமான மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி, சென்னையில் நாளை முதல் தொடங்குகிறது.
தமிழ் திரையுலகை மாறுபட்ட பாதையில் அழைத்துச் செல்வதில் முக்கிய பங்கு இயக்குநர் பா ரஞ்சித்துக்கு உண்டு. முன்னணி இயக்குராக வலம் வரும் அவர், அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து மெட்ராஸ், காலா, கபாலி உள்ளிட்ட படங்களை இயக்கினார். இதைத் தொடர்ந்து பெரும் நட்சத்திர பட்டாளத்தை வைத்து நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தை இயக்கினார். இவர் தற்போது விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கி உள்ளார். 2014-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கலான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் மற்றும் இறுதிக்கட்ட பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இயக்குநர் பா.ரஞ்சித், நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார்.
அதேபோல, நீலம் பண்பாட்டு மையம் என்ற பெயரில் பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது பா ரஞ்சித் நடத்தி வருகிறார்.அந்த வகையில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் மக்களிசை என்ற பெயரில் பாரம்பரிய இசைக் கலைஞர்கள், நாட்டுப்புற கலைஞர்களை வைத்து இசை நிகழ்ச்சியும் நடத்தி வருகிறார். இதையடுத்து 2023-ம் ஆண்டுக்கான மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி கடந்த 23-ம் தேதி கேஜிஎஃப் எனப்படும் கோலார் தங்க வயலில் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் நாளை இந்நிகழ்ச்சி தொடங்குகிறது. மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் உயர்நிலை பள்ளியில் மதியம் 2 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், பாரம்பரிய இசைக் கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் தங்களது திறமைகளை காட்ட உள்ளனர். 28, 29 மற்றும் 30 ஆகிய மூன்று நாட்கள் தொடர்ந்து இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.