ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் புதிய படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘நானும் ரௌடி தான்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஆர்.ஜே. பாலாஜி. அதை தொடர்ந்து இவர் எல்.கே.ஜி, வீட்ல விசேஷம், ரன் பேபி ரன் ஆகிய படங்களில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றார். இது தவிர இவர், நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன்’ எனும் திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார். அதைத்தொடர்ந்து சூர்யா நடிப்பில் ‘கருப்பு’ திரைப்படத்தை இயக்குகிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் புதிய படம் தொடர்பான அப்டேட் கிடைத்திருக்கிறது. அதாவது ஆர்.ஜே. பாலாஜி சமீபத்தில் நடிகர் மணிகண்டனை சந்தித்து ஒரு வரி கதையை சொன்னதாகவும், அது மணிகண்டனுக்கு பிடித்துப்போனதாகவும் தகவல் கசிந்துள்ளது. எனவே இனிவரும் நாட்களில் இவர்களது கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்றும் இந்த படம் தான் ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய் பீம் படத்தின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்ற மணிகண்டன், குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் ஆகிய வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அடுத்தது இவர் இயக்குனராகவும் மாற இருக்கிறார் என பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.