அமரன் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ‘ரங்கூன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. இவர் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இதற்கிடையில் இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, கீதா கைலாசம், ராகுல் போஸ் ஆகியோர் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படம் பல்வேறு தரப்பினரிடைய பாராட்டுகளை பெற்றது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி வரை கோவாவில் நடைபெற இருக்கும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தங்கமயில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும் Indian Panaroma பிரிவில் ஓப்பனிங் படமாக திரையிடப்பட இருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சிவகார்த்திகேயன், கமல்ஹாசன், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட படக்குழுவினர் கோவா செல்கின்றனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராஜ்குமார் பெரியசாமி, “Indian Panaroma பிரிவில் அமரன் திரைப்படம் முதலாவதாக திரையிட தேர்வாகி இருக்கிறது. மேலும் கோல்டன் பீகாக் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. கண்டிப்பாக சந்தோஷமாக இருக்கிறது. இது முக்கியமான கௌரவமாக நினைக்கிறேன். இந்த விழாவில் ஒரு தமிழ் படம் ஓபனிங் படமாக தேர்வு செய்யப்பட்டிருப்பது ரொம்ப பெருமையான விஷயமாக நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


