வெற்றிமாறன் – சிம்பு படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களின் ஒருவரான வெற்றிமாறன் தனித்துவமான படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவருடைய இயக்கத்தில் கடைசியாக ‘விடுதலை பாகம் 2’ திரைப்படம் வெளியானது. அதே சமயம் இவர், சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்’ எனும் திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டிருந்தார். ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் தனுஷை வைத்து ‘வடசென்னை 2’ படத்தை இயக்க உள்ளார் வெற்றிமாறன். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இயக்குனர் வெற்றிமாறன், சிம்புவின் 49வது படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். தற்காலிகமாக STR 49 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் இந்த படமானது ‘வடசென்னை’ படத்தின் யுனிவர்ஸாக உருவாகப் போவதாகவும், இது இரண்டு பாகங்களாக உருவாகப்போவதாகவும் தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அடுத்தது இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. இது தவிர இந்த படத்தின் இசையமைப்பாளர் யார்? என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அதன்படி ஜி.வி. பிரகாஷ் அல்லது சந்தோஷ் நாராயணன் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் இப்படத்திற்கு இசையமைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், படக்குழு இந்த படத்தின் இசையமைப்பாளராக அனிருத்தை முடிவு செய்து இருக்கிறார்களாம். விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. வெற்றிமாறன் படத்திற்கு அனிருத் இதுவரை இசையமைக்காததால், இந்த காம்போ எப்படி ஒர்க் அவுட் ஆகப்போகிறது என்பதை காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.