தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் இவர் விடுதலை 2, ட்ரெயின், ஏஸ், காந்தி டாக்ஸ் இது போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் சில படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதற்கு இடையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த ஏழு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் ஒரு சில காரணங்களால் இந்த சீசனை தொகுத்து வழங்க முடியாத நிலையில் அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதன்படி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் விஜய் சேதுபதி மீது குற்றம் சாட்டியுள்ளார். அதன்படி தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, “இந்நிகழ்ச்சியின் முன்னாள் நடத்துனர் கமல்ஹாசன். இப்போது விஜய் சேதுபதி. இருவரும் அவரவர் பாணியில் நடத்துவதும் அதற்கு ஆதரவும் விமர்சனங்களும் எழுவது இயல்புதான். அதாவது எல்லோரிடமும் ரொம்பவும் மென்மையாக கொஞ்சம் கூட கடிந்து கொள்ளாமல் கண்டிப்பில்லாமல் இருக்கிறார் என்பதுதான் கமல்ஹாசன் மேல் இருந்த குற்றச்சாட்டு.
இதையெல்லாம் அறிந்து தானே வந்திருப்பார் விஜய் சேதுபதி. தொடக்கத்தில் விஜய் சேதுபதியின் இயல்பான அதிரடியான பாணியை கண்டு பாராட்டியவர்களும் வியந்தவர்களும் இன்று வெறுப்படையும் நிலைக்கு சென்று இருக்கின்றனர். போட்டியாளர்களிடம் உரையாடும்போது பிரச்சனைகளை ஆராயும் போது கமல்ஹாசனிடம் பண்பு, முதிர்ச்சி, ஞானம், சமூகப் பொறுப்பு, மதிநுட்பம் அனைத்தும் இருந்தது. அவர் ஒவ்வொருவரையும் ஆளுமைகளாக பார்த்தார். அவர்களை நேரடியாக குற்றம் சாட்டியது இல்லை. சொற்களால் காயப்படுத்தியதில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக தாக்கியது இல்லை. அவர்களின் உணர்வுகளை சீண்டியதில்லை. தனக்கிருந்த உயர் பொறுப்பை கொண்ட அவர்களை சிறுமைப்படுத்தியது இல்லை. இவற்றையெல்லாம் இப்போது ஏன் சொல்கிறேன் என்று புரிந்து கொள்பவர் புரிந்து கொள்ளட்டும். இது ஆணாதிக்க உலகம். நம் தமிழ்ச்சமூகமும் இதற்கு விதிவிலக்கல்ல. அதன் நிரூபணத்தை இந்த வீட்டில் 55 நாட்களாகக் கண்கூடாகக் கண்டுவருகிறோம். தன்னைக் கேள்வி கேட்கிற, விமர்சிக்கிறப் பெண்களை எப்படி ஆண்களெல்லாம் ஒன்றுசேர்ந்து கடுமையாக, கொடுமையாகத் தாக்கி நிலைகுலையச் செய்து மகிழ்கிறார்களோ, அதையே நிகழ்ச்சி நடத்துநரும் நேற்று செய்தது நம்மை அச்சப்பட வைத்திருக்கிறது. இவர் ஆண்களைக் கண்டு அஞ்சுகிறார் என்பது ஒருபுறம். அதனால் பொதுநலக் கேடு ஒன்றுமில்லை. அது அவர் இயல்பு. நமக்குப் பிரச்சனையில்லை. ஆனால், அத்தனைக் குற்றங்கள் செய்த ஆண்களை விசாரிக்காமல், ஏற்கனவே அவர்களால் உணர்வுபங்கம் செய்யப்பட்டப் பெண்ணை இவரும் சேர்ந்து குற்றப்படுத்தி, சிறுமைப்படுத்தி, தான் செய்ததுதான் தவறு என்று சொல்லவைத்து நொறுங்கவைத்து மகிழ்ந்ததையும் நேற்று கண்டபோது, தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் எதிர்காலத்தைக் குறித்த அச்சம் மேலோங்கியது.
அதோடு நிற்கவில்லை. வெறிபிடித்த விலங்குகள் போல சுற்றிநின்று அந்தப் பெண்ணை உணர்வளவில் சின்னாபின்னமாக்கிய அந்த ஆண்களைப் பாராட்டி, Bigg Boss வரலாற்றிலேயே சிறந்த பங்கேற்பாளர் என்கிற பட்டத்தையும் வழங்கியது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. போட்டியாளர்களும் உங்களையும் என்னையும் போல மனிதர்தானே? அவரவர்க்கு ஒரு பேசும், சிந்திக்கும், செயல்படும் விதம் இருப்பதும் இயற்கைதானே? அதை கிண்டலடிப்பதும், கடுமையாக சாடுவதும், இவர் நினைப்பதையே அவர்கள் சொல்லவேண்டும், அதை இவர் விரும்பும் வண்ணமே சொல்லவேண்டும் என்பதும், சொல்லாவிட்டால் சினமடைவதும், சலித்துக்கொள்வதும், எதிரில் நிற்பவரைப் பொதுவெளியில் கேவலப்படுத்துவதும், வேண்டா வெறுப்போடு அவர்களிடம் உரையாடுவதும் ஒரு தொகுப்பாளர்க்கு அழகா? பணத்துக்காக நிகழ்ச்சி நடத்த வருபவர் குறைந்தபட்ச பொறுப்போடு, கண்ணியத்தோடு, ஈடுபாட்டோடு நடத்தவேண்டும். தமிழ்ச்சமூகமே, விழித்துக்கொள். வல்லவரெல்லாம் நல்லவர் என்பதில்லை என்பதை விளங்கிக்கொள்.புகழின் உச்சியில் இருப்பவர்க்கு சமூகப் பொறுப்பும் இருக்கிறது என்பதை நினைவூட்டு” என்று குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -