ஜெயிலர் 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து ரஜினி, நெல்சன் கூட்டணியில் ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா மேனன் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர். முதல் பாகத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறது. அனிருத் தான் இதற்கும் இசையமைக்கிறார். இது தவிர மோகன்லால் – சிவராஜ்குமார் ஆகிய இருவரும் ஜெயிலர் 2 படத்திலும் கேமியோ ரோலில் நடிக்க உள்ளனர். நந்தமுரி பாலகிருஷ்ணாவும் பவர் ஃபுல்லான கேமியோ ரோலில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் எனவும் சமீபகாலமாக பல தகவல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகப்படுத்தி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் அட்டப்பாடியில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக சொல்லப்பட்டது. அதைத்தொடர்ந்து நாளை (மே 9) முதல் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கோழிக்கோடு பகுதியில் நடைபெற இருப்பதாகவும், அங்கு தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.