லெஜெண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தொழிலதிபரான அருள் சரவணன் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ‘லெஜெண்ட்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தின் மேக்கிங் நன்றாக இருந்தாலும் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதே சமயம் பலரும் லெஜெண்ட் சரவணனின் லுக்கை கலாய்த்து வந்தனர். எனவே இவர், தன்னுடைய அடுத்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடிப்பதற்காக சிகிச்சை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. அதன்படி தனது அடுத்த படத்தை காக்கி சட்டை, கொடி, ஆகிய படங்களின் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார் லெஜெண்ட் சரவணன்.
‘கருடன்’ படத்திற்கு பிறகு துரை செந்தில்குமார் இயக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் துரை செந்தில்குமார், லெஜெண்ட் சரவணனை இந்த படத்தில் வேறொரு பரிமாணத்தில் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப லெஜெண்ட் சரவணனும் இந்த படத்திற்காக தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். திரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி தூத்துக்குடி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இதன் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் கிடைத்திருக்கிறது. அதன்படி அடுத்த மாதம் (டிசம்பர்) இந்த படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.


