இயக்குனர் லோகேஷ் கனகராஜ், பிரபல தெலுங்கு ஹீரோவை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவருடைய இயக்கத்தில் கடைசியாக ‘கூலி’ திரைப்படம் வெளியானது. ரஜினி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உலகம் முழுவதும் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதே சமயம் லோகேஷ் கனகராஜை பலரும் ட்ரோல் செய்து வந்தனர். ஏனென்றால் லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களில் உள்ள சில விஷயங்கள் ‘கூலி’ படத்தில் இல்லாததாலும், லாஜிக் மிஸ்டேக்குகள் காரணமாகவும் இந்த படம் பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டத்தை கவரந்திழுக்கவில்லை.
இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ், அமீர்கான் நடிப்பில் சூப்பர் ஹீரோ படத்தை இயக்கப்போவதாகவும், கார்த்தி நடிப்பில் கைதி 2 படத்தை இயக்கப் போவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இந்த இரண்டு படங்களுமே கைவிடப்பட்டதாக பல தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தவிர லோகேஷ், ரஜினி- கமல் இருவரையும் வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார் என்று பல தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இதுவரை இந்த செய்தி உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் தான் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ், பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணிடம் கதை சொன்னதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படமானது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட இருப்பதாகவும், இந்த படத்தை ஜனநாயகன், டாக்ஸிக் ஆகிய படங்களை தயாரிக்கும் கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.


