இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அஜித்துடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வருகிறார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படமானது 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜிடம், “ரஜினி, கமல், விஜய் என பெரிய நடிகர்களுடன் பணியாற்றியுள்ளீர்கள். எப்போது அஜித்துடன் பணியாற்ற போகிறீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு லோகேஷ் கனகராஜ், “மற்றவர்களை போலவே நானும் அஜித்துடன் பணியாற்ற விரும்புகிறேன். விரைவில் அது நடக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. எனவே வரும் காலத்தில் லோகேஷ் கனகராஜ், அஜித் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -