இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம் போன்ற காதல் படங்களை இயக்கி இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதே சமயம் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போன்ற திரில்லர் படங்களையும் இயக்கி வெற்றி கண்டார். கடைசியாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஜோஸ்வா இமைபோல் காக்க எனும் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. முன்னதாக விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டும் ஒரு சில சிக்கல்களால் ரிலீஸ் ஆகாமல் பல வருடங்களாக நிலுவையில் இருக்கிறது. எனவே அடுத்ததாக கௌதம் வாசுதேவ் மேனன் தனது தாய் மொழியான மலையாளத்தில் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த படத்தில் மம்மூட்டி ஹீரோவாக நடிக்க போவதாகவும் அவரே இப்படத்தை தயாரிக்கப் போவதாகவும் சொல்லப்பட்டது.
அது மட்டுமில்லாமல் மம்மூட்டிக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வெளிவந்த நிலையில் பின்னர் இதில் நடிகை சமந்தா நடிக்கப் போகிறார் என்று அப்டேட் கிடைத்தது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. இந்த நிலையில் மம்மூட்டி, கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூலை 10) பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள்
இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.