கௌதம் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி…படப்பிடிப்பு இந்த தேதியில் தானா?…
- Advertisement -
கௌதம் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வரும்15-ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கில் இயக்குநர்கள் இருந்தாலும், அவர்களின் கண்ணோட்டமும், பட இயக்கமும் மாறுபட்டு இருக்கும். அந்த வகையில், காதலை மாறுபட்ட கோணத்தில் திரைக்கு வரும் கல்ட் இயக்குநர் கௌதம் மேனன். மின்னலே படத்தில் தொடங்கிய கௌதமின் திரைப்பயணம் என்றுமே ஏறுமுகம் தான். கௌதம் மேனன் இயக்கத்தில் இறுதியாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியானது. இதில் சிம்பு நாயகனாக நடித்திருந்தார்.
கௌதம் இயக்கத்தில் உருவான புதிய திரைப்படம் ஜோஷ்வா இமை போல் காக்க. பல ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த இத்திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வௌியானது. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில், வருண் நாயகனாக நடித்திருந்தார். இதேபோல, கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்திருந்த துருவ நட்சத்திரம் திரைப்படமும் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இழுபறியில் உள்ளது.
இந்நிலையில், அடுத்ததாக மலையாளப் பக்கம் திரும்பிய கௌதம் மேனன், மம்மூட்டியை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இப்படத்தை மம்மூட்டியே தயாரிக்கிறார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை நயன்தாரா இணைவதாக கூறப்படுகிறது. மேலும், வரும் ஜூன் 15- ம் தேதி சென்னையில் படப்பிடிப்பு தொடங்குவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.