இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இவர் தமிழ் சினிமாவில் தாஜ்மஹால் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி வருஷமெல்லாம் வசந்தம், சமுத்திரம் ஆகிய வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். அதேசமயம் இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான மார்கழி திங்கள் எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குனராகவும் உருவெடுத்தார். இந்த படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அறிமுக நடிகர் சாம் செல்வன் கதாநாயகனாக நடித்திருந்தார். ரக்ஷனா கதாநாயகியாக நடித்திருந்தார். கிராமத்துக் கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகன் சாம் செல்வன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பாரதிராஜா குறித்து பேசியுள்ளார். அதன்படி அவர், “பாரதிராஜா சார் எப்போதும் ஒரு சிங்கம் மாதிரி. ஒரு சிங்கத்தை மனிதர்களுடன் சாதுவாக பழகவிட்டால் சிங்கத்தின் அருமை தெரியாது என்பார்கள். ஆனால் என்ன இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான். அவர் அவ்வளவு பெரிய லெஜன்ட். அவருடைய படங்களை பிரமித்து பார்த்து இருக்கிறேன்.
அவர் என்னிடம் பேசும்போது அடிக்கடி கிள்ளி பார்ப்பேன். அவருடைய படங்களை பைத்தியம் மாதிரி பார்ப்பேன். சிவப்பு ரோஜாக்கள், 16 வயதினிலே ஆகிய படங்களை எத்தனை முறை பார்த்திருக்கிறேன் என்ற கணக்கே இல்லை. அப்பேர்ப்பட்ட ஒரு மனிதனுடன் பயணிக்கும் ஒரு வாய்ப்பு மனோஜ் சார் மூலம் எனக்கு கிடைத்தது. அதை என்னால் மறக்கவே முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -