பிரபல மலையாள நடிகர் வீட்டு விழாவில் பங்கேற்கும் பிரதமர்
- Advertisement -
பிரபல மலையாள நடிகரின் மகள் திருமணத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சுரேஷ் கோபி. 80-களில் தொடங்கிய இவரது திரைப்பயணம் இன்று வரை சென்று கொண்டிருக்கிறது. மலையாளம் மட்டுமன்றி தமிழிலும் அவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அஜித்துடன் தீனா, சமஸ்தானம், ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வௌியான ஐ படத்தில் இவர் வில்லனாக நடித்திருப்பார். அப்படத்தில் இவரது நடிப்பு மிரட்டலாக இருந்தது. ஆக்ஷன் ஹீரோவாக மலையாளத்தில் பல படங்களிலும், குணச்சித்திர நடிகராகவும் நடித்திருக்கிறார். தனக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்டவர் சுரேஷ் கோபி.

65 வயதாகும் இவர் கடந்த சில வருடங்களாக நடிப்பில் ஆர்வம் செலுத்துவதை குறைத்துவிட்டு, அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அவர் பல முக்கிய அரசியல் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், சுரேஷ் கோபியின் மகள் பாக்யாவிற்கும், தொழிலதிபர் ஸ்ரேயஸ் மோகன் என்பவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. கேரளாவின் புகழ்பெற்ற குருவாயூர் கோயிலில், வரும் 17-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.

இதனிடையே, தங்களது இல்ல திருமண விழாவிற்கு வருகை தரும்படி, நடிகர் சுரேஷ்கோபி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருக்கிறார். இதையடுத்து, மோடியும் இந்த விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்த உள்ளார். இந்த விழாவில் பங்கேற்ற பின்னர் அவர் கொச்சி செல்ல உள்ளாராம். இதனால், கேரளாவில் பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.