கடந்த ஜனவரி மாதம் வெளியான கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தனுஷின் நடிப்பிலும் இயக்கத்திலும் உருவாகியுள்ள திரைப்படம் தான் ராயன். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், செல்வராகவன், பிரகாஷ்ராஜ், எஸ் ஜே சூர்யா, சரவணன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தனுஷின் ஐம்பதாவது படமான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா இன்று (ஜூலை 6) சென்னையில் நடைபெறுகிறது. இதற்காக மிகப்பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்நிகழ்ச்சியில் தனுஷ், ஏ ஆர் ரகுமான், பிரகாஷ்ராஜ், சந்தீப் கிஷன், உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய பிரகாஷ்ராஜ், “10 கிலோ சதை, 15 கிலோ எலும்பை வெச்சிட்டு துள்ளிக்கிட்டு இருக்கியேன்னு நான் ஒரு டயலாக் சொல்லுவேன். இன்னும் துள்ளிக்கிட்டு தான் இருக்காரு. அவரை பார்த்து எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு இப்போ ஒரு இயக்குனரா இருக்காருன்னு. அசுர வளர்ச்சி. அழகான வளர்ச்சி” என்று கலகலப்பாக பேசி தனுஷை பாராட்டினார்.
துஷாரா விஜயன் பேசுகையில், “ராயன் படத்தில் நடித்த அனுபவத்தை வார்த்தைகளால் என்னால் விவரிக்க முடியவில்லை. நிறைய திட்டு வாங்கி இருக்கேன். இது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு” என்று பேசினார்.
காளிதாஸ் ஜெயராம், “நான் தனுஷ் சாரை ஒரு வழிகாட்டியாக பார்க்கிறேன். யாருக்கு தான் தனுஷ் சாரை பிடிக்காது” என்று பேசினார்.
அபர்ணா பாலமுரளி பேசும்போது, “ராயன் திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். என்னை தேர்ந்தெடுத்ததற்கு தனுஷ் சாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தான் என் இன்ஸ்பிரேஷன்” என்று தெரிவித்தார்.
அடுத்ததாக சந்தீப் கிஷன் பேசும் போது, “தனுஷ் அண்ணாவுடன் இது எனக்கு இரண்டாவது படம். அவர்தான் என் அண்ணா, என்னுடைய வழிகாட்டி. நான் கதை கேட்காமல் நடித்த முதல் படம் இதுதான். தனுஷ் அண்ணா எல்லோருக்கும் பிடித்தவர். அவர் ஒரு நல்ல மனிதர். அனைவருக்கும் அவர் ஒரு அடையாளம். அது வேறு நடிகராக இருந்திருந்தால் என்னுடைய கதாபாத்திரத்திற்கு இரட்டை வேடங்களில் நடித்திருக்கலாம். அது வலுவான கதாபாத்திரம். அதை தனுஷ் அண்ணா எனக்கு கொடுத்தார். லவ் யூ அண்ணா. என்னை நம்பியதற்கு நன்றி” என்று பேசினார்.