ராம்சரண் பிரபல தமிழ் பட தயாரிப்பாளருடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தெலுங்கு திரை உலகில் டாப் நடிகர்களில் ஒருவரான ராம்சரண் கடைசியாக ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். சங்கர் இயக்கத்தில் மிகப்பிரம்மாண்டமாக மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதைத்தொடர்ந்து ராம்சரண் தனது 16வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
புச்சிபாபு சனா இயக்கும் இந்த படத்திற்கு ‘பெடி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு ஐதராபாத், மைசூர், இலங்கை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த படமானது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இது தவிர சுகுமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருந்தார் ராம்சரண். இவ்வாறு பிசியாக நடித்து வரும் ராம்சரணின் அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் ராம்சரண், லைக்கா நிறுவனத்தின் கீழ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த படத்தின் இயக்குனர் யார்? என்பது போன்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.


