உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாஸில் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின்
நடிப்பில் மாமன்னன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை கர்ணன், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
படத்திற்கு திரைக்கு வரும் முன்பே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையிலும் இந்த படம் கடந்த ஜூன் 29ஆம் தேதி சுமார் 700 திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

அரசியலில் சாதிய ஒடுக்கு முறை ஏற்படுத்தும் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவான மாமன்னன் திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 7 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்போது விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பல்வேறு தரப்பினரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குனர் பா ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாமன்னன் திரைப்படம் பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாகக் கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. உண்மையாகவே தனித்தொகுதி MLAக்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியல் இன மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகள் இருந்தும் ஊமையாக இருப்பதற்கான காரணம் என்ன? அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும், சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று மாமன்னன். உண்மையாகவே பெரும் பாராட்டுக்குரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின். திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார். அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தில் இருந்து ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒண்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியைப் பெற்ற வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.