ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படத்தின் திரை விமர்சனம்.
சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்த ரியோ ராஜ் வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அதிலும் இவரது நடிப்பில் வெளியான ‘ஜோ’ திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ‘ஜோ’ படக் கூட்டணி மீண்டும் ‘ஆண்பாவம் பொல்லாதது’ எனும் திரைப்படத்தில் இணைந்திருக்கிறது. இந்த படத்தை கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார்.
ட்ரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சித்து குமார் இசையமைத்துள்ளார். காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் மாளவிகா மனோஜ், ஜென்சன் திவாகர், விக்னேஷ் காந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் இன்று (அக்டோபர் 31) திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ரியோ ராஜ், ஐடி ஊழியராக நடித்துள்ளார். இவர், இன்றைய தலைமுறைக்கு ஏற்ற மாதிரி யோசிக்க கூடிய மாளவிகா மனோஜை திருமணம் செய்து கொள்கிறார். இருவருக்கும் இடையில் ஈகோ போன்ற காரணங்களால் சில மாதங்களிலேயே பிரச்சனை ஏற்பட அது விவாகரத்து வரை செல்கிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

‘ஜோ’ படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் ரியோ – மாளவிகா மனோஜ் இருவருக்கமான காதல், காமெடி, சண்டை காட்சிகள் அருமை. ரியோ ராஜ் இந்த படத்தில் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். மாளவிகா மனோஜ், ‘ஜோ’ படத்திற்கு அப்படியே நேர் எதிரான கேரக்டரில் நடித்து அசத்தியுள்ளார். இரண்டாம் பாதியில் விக்னேஷ்காந்தின் கேரக்டர் பேசும் விதமாக அமைந்துள்ளது. மேலும் கோர்ட் சீன், வசனம் போன்றவை சூப்பர். ஜென்சன் திவாகரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் நிலையில் அவர் பேசும் ஒவ்வொரு வசனத்திற்கும் தியேட்டரில் சிரிப்பொலியும், விசில் சத்தமும் தான்.
இது தவிர சித்து குமாரின் இசை படத்திற்கு பக்கபலம். இயக்குனர் கலையரசன் தங்கவேல் படம் தொடங்கியது முதல் இடைவேளை வரை காமெடி காட்சிகளை வைத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். எனவே பல இடங்களில் காமெடி காட்சிகள் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஆனால் எமோஷனல் கனெக்ட் பெரிய அளவில் இல்லை. அடுத்தது கிளைமேக்ஸ் காட்சியில் வரும் வசனங்கள் பலரையும் சிந்திக்க வைக்கிறது. மொத்தத்தில் படத்தில் சில குறைகள் இருந்தாலும் திருமணமானவர்கள் பார்த்து ரசிக்கும் படம் தான் ஆண்பாவம் பொல்லாதது.


