ஆர்.ஜே. பாலாஜியின் சூர்யா 45 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நானும் ரௌடி தான் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே. பாலாஜி. அதைத் தொடர்ந்து இவர் எல்கேஜி, வீட்ல விசேஷம், ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன், சொர்க்கவாசல் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதற்கிடையில் இவர், நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் எனும் திரைப்படத்தை இயக்கினார். அதை தொடர்ந்து இவர், சூர்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்கிறார். இதில் சூர்யாவுடன் இணைந்து திரிஷா, நட்டி நடராஜ், சுவாசிகா, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் படத்தின் படப்பிடிப்புகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி கிட்டத்தட்ட இந்த படமானது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. தற்போது கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நடிகை திரிஷா, இப்படத்தில் தனது போர்ஷன்களை முடித்துவிட்டார் என்றும் அடுத்த வாரம் சூர்யாவின் போர்ஷன்கள் முடிவடையும் என்றும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஜூன் மாதம் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்திற்கு வேட்டை கருப்பு என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் பல தகவல்கள் தீயாய் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.