கொரோனா குமார் படம் தொடர்பான விவகாரத்தில் சிம்பு தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவை வைத்து கொரோனா குமார் எனும் திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்தார். இது தொடர்பான அறிவிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது. ஆனால் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு தொடங்கவில்லை.

இந்நிலையில் சிம்பு, தன்னிடம் 1 கோடி ரூபாய் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு கொரோனா குமார் படத்தில் நடிக்காமல் மற்ற படங்களில் நடித்து வருவதால் அதற்கு தடை விதிக்க கோரி ஐசரி கணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இல்லையென்றால் தன்னிடம் பெற்ற முன் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என ஐசரி கணேஷ் சார்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டது.
இது சம்பந்தமாக வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் சிம்பு தரப்பில் இன்று பதிலளிக்கப்பட்டுள்ளது. ‘ஒரு ஆண்டுக்குள் படத்தை ஆரம்பிக்கவில்லை என்றால் ஒரு கோடி ரூபாய் முன் பணத்தை திரும்ப செலுத்த தேவையில்லை ‘ என்று ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளதாக ஒப்பந்த நகல் சிம்பு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான அடுத்த கட்ட ஆலோசனை வருகின்ற அக்டோபர் 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.