சிவாஜி கணேசனின் அன்னை இல்ல வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
சிவாஜி கணேசனின் பேரனும் ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் தனது ஈசன் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜெகஜால கில்லாடி எனும் திரைப்படத்தை தயாரிப்பதற்காக தனபாக்கியம் என்டர்பிரைஸ் நிறுவனத்திடம் ரூ. 3.74 கோடி கடன் பெற்றிருந்தாக தகவல் வெளியானது. இந்த கடனை துஷ்யந்த் திரும்ப செலுத்தாத நிலையில், தனபாக்கியம் எண்டர்பிரைஸ் நிறுவனத்திடம் பெற்ற கடன் தொகையை வட்டியுடன் ரூ. 9.39 கோடி திருப்பி தர வேண்டும் எனவும் ஜெகஜால கில்லாடி படத்தில் அனைத்து உரிமைகளையும் ஒப்படைக்குமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் பிறகு இந்த வழக்கில் கடன் தொகையும், உரிமைகளும் திரும்ப வழங்கப்படாததால் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார், அன்னை இல்லத்தில் தனக்கு பங்கு இல்லை எனவும் ஜப்தி உத்தரவை ரத்து செய்யக் கோரியும் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். அதேசமயம் நடிகர் பிரபுவும் அன்னை இல்லம் தனக்கு சொந்தமானது என்றும் இந்த வழக்கு தொடரப்பட்டதற்கு சில வருடங்களுக்கு முன்பாகவே தன்னுடைய தந்தை சிவாஜி உயில் எழுதிவிட்டார் என்றும் ஆகையினால் ஜப்தி உத்தரவை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்தார். இந்நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் பிரபு தான் என்றும், ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.