சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், இஷா கோபிகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டில் இந்த அயலான் படம் தொடங்கப்பட்டது. ஆனால் ஐந்து வருடங்கள் கழித்து 2024 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் அயலான் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது அயலான் திரைப்படத்தை முதலில் 24 ஏ எம் நிறுவனம் தான் தயாரித்து வந்தது. இந்நிறுவனம் டி எஸ் ஆர் ஃபிலிம்ஸ் என்னும் நிறுவனத்திடம் இருந்து படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக 10 கோடி ரூபாய் கடனாக பெற்றிருந்தது. சொன்னபடி அந்த பணத்தை திரும்ப செலுத்த முடியாத காரணத்தால் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அதற்கு பொறுப்பேற்று மூன்று கோடி ரூபாய் வரை முன்பணமாக செலுத்தியது. அதைத்தொடர்ந்து அயலான் பட ரிலீஸுக்கு முன்பு மீதமுள்ள பணத்தை செலுத்த வேண்டும் என்று கடந்த 2021 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மீதமுள்ள பணத்தை திரும்ப செலுத்தாமல் அயலான் திரைப்படத்தையும், ஆலம்பனா திரைப்படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளது.

இதன் விளைவாக டி எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனம், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி வருகின்ற ஜனவரி ஒன்பதாம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்ததோடு மட்டுமல்லாமல் அயலான் மற்றும் ஆலம்பனா திரைப்படத்தை இன்னும் 4 வாரங்களுக்கு வெளியிடக் கூடாது என்று தடை விதித்துள்ளார்.
வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ஆலம்பனா திரைப்படம் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.