சுந்தர் சி தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர். அந்த வகையில் பல படங்களில் தொடர்ந்து நடித்து வரும் சுந்தர் சி, அரண்மனை 1, 2, 3 போன்ற ஹாரர் படங்களையும் இயக்கி வருகிறார். அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடும் போட்டியால் இதன் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் மாதத்தில் இந்த படத்தை வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம், சில அரசியல் காரணத்தால் அரண்மனை 4 படத்தை வெளியிட முடியாது என்று முடிவெடுத்துவிட்டதாம். எனவே தமிழில் தான் இயக்கிய படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என்பதனால் அடுத்ததாக ஹிந்தியில் அறிமுகமாக இருக்கிறாராம் சுந்தர் சி.
அதன்படி பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், சுந்தர் சி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மற்றொரு கதாநாயகனாக பாபி தியோல் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.