சுந்தர்.சி -யின் கனவுத்திட்டமான சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் சுந்தர். சி இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். இவரது இயக்கத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியிருந்த மதகஜராஜா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. இதற்கிடையில் சுந்தர். சி, கேங்கர்ஸ், மூக்குத்தி அம்மன் 2, அரண்மனை 5 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர், சங்கமித்ரா எனும் வரலாற்றுப் படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் சுந்தர். சி. அதன்படி சங்கமித்ரா திரைப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரூ. 250 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் வணிக ரீதியிலான பிரச்சனை காரணமாக இந்த படம் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது. அதேசமயம் கடந்த ஆண்டில் இயக்குனர் சுந்தர்.சி சங்கமித்ரா படம் விரைவில் தொடங்க இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் அதன் பிறகு எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், சங்கமித்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பு 2026 ஆம் ஆண்டு தொடங்கும் என புதிய அப்டேட் கிடைத்துள்ளது. மேலும் இந்த படத்தில் ஏற்கனவே ஒப்பந்தமான நடிகர்களே நடிக்கப் போகிறார்களா? அல்லது வேறு நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா? என்பது தொடர்பான தகவல் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.