நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக்கியுள்ள கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் இந்த படம் உருவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து சூர்யா புறநானூறு எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். ஆனால் படம் அடுத்த கட்டத்திற்கு நகரவே இல்லை. இதற்கிடையில் நடிகர் சூர்யா, தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வரும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. சூர்யாவின் 44ஆவது படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க இருக்கிறார்.
இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி வருவதோடு மட்டுமல்லாமல் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி சூர்யா 44 படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் மேலும் ஒரு பாலிவுட் நடிகை இதில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. அதேசமயம் இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 ஜூன் மாதத்தில் தொடங்கும் என ஏற்கனவே செய்திகள் பரவி வந்த நிலையில் ஜூன் மாதம் இரண்டாம் தேதி படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக நம்ம தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் தொடங்க இருப்பதாகவும் அங்கு 40 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் ஊட்டி மற்றும் மற்ற பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படம் தொடர்பான அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று நம்பப்படுகிறது.