கடந்த மே மாதம் 1ம் தேதி சசிகுமார், சிம்ரன், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், எம்.எஸ். பாஸ்கர், மிதுன், கமலேஷ், யோகலட்சுமி ஆகியோரின் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்றது. அதேசமயம் ஓடிடியிலும் வெளியாகி வெற்றி நடை போடுகிறது. இந்த படத்தில் தான் ஒரு காட்சியில் பிரசாந்தின் ‘மம்பட்டியான்’ படத்தில் இடம்பெற்ற ‘மலையூரு நாட்டாம’ எனும் பாடலை படக்குழு பயன்படுத்தியிருந்தனர். படத்தில் இந்த காட்சி வரும்போது அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
அதைத்தொடர்ந்து இந்த பாடல் மீண்டும் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் பேட்டியில் கலந்து கொண்டு பேசிய தியாகராஜனிடம், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் மம்பட்டியான் பட பாடலை பயன்படுத்துவதற்கு உங்களிடம் அனுமதி கேட்டார்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தியாகராஜன், “அவர்கள் அனுமதி எல்லாம் வாங்கவில்லை. ஆனால் அந்த பாட்டு மீண்டும் மக்களிடம் ஹிட்டாகியுள்ளது. படக்குழுவை நான் வாழ்த்தினேன்.
அந்த பாடலை அவர்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக பலரும் என்னிடம் அவர்கள் மீது வழக்கு போடுங்க. பணம் கேளுங்க என்று சொன்னாங்க. ஆனா எனக்கு அந்த மாதிரி தோணவே இல்ல. அந்தப் பாடல் மறுபடியும் ஹிட் ஆனதுக்கு நான்தான் காசு கொடுக்கணும். பல வருடங்கள் கழித்து அந்த பாடல் மீண்டும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அது எனக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -