கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகாது என கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் வருகின்ற ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழ் மொழியில் இருந்து தான் கன்னட மொழி பிறந்தது என கூறியிருந்தார். கமல்ஹாசன் கூறிய இந்த கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் தலைவர்களும் கமல்ஹாசனுக்கு எதிராக தங்களின் கண்டனங்களை தெரிவித்தனர். அதேசமயம் தக் லைஃப் பட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு, கர்நாடகாவில் அப்படம் வெளியாக கூடாது என தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இது தொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதாவது இந்த வழக்கில் நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும், மன்னிப்பு கேட்டால் மட்டுமே கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியாகும் என வலியுறுத்தப்பட்டது. கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியும் கமல் மன்னிப்பு கேட்க காலக்கெடு விதித்தார். ஆனால் கமல்ஹாசன், இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மறுத்திருக்கும் நிலையில், ஜூன் 5-ம் தேதி தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாது எனவும், இப்பிரச்சனை முடிவுக்கு வந்த பின்னர் படம் வெளியிடப்படும் எனவும் உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.