நடிகர் விவேக்கின் 62வது பிறந்தநாள் இன்று.
சின்னக் கலைவாணர், ஜனங்களின் கலைஞன் என்று மக்களால் புகழப்படுபவர் தான் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். சாமானிய மக்களும் திறமை இருந்தால் திரைத் துறையில் நுழையலாம் என்று கூறியவர்.
விவேக்கின் இயற்பெயர் விவேகானந்தன். இவர் கடந்த 1961 ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகில் இருக்கும் பெருங்கோட்டூரில் பிறந்தவர். சினிமாவிற்காக விவேக் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். விவேக் தொடக்கத்தில் மேடைகளில் ஸ்டாண்ட் அப் காமெடிகளை செய்து வந்தார். அதன் பின் மறைந்த கே பாலச்சந்தரிடம் எழுத்தாளராக பணி புரிந்தார். இவரின் நகைச்சுவை திறமையை பார்த்து கே பாலச்சந்தர், அவர் இயக்கிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். கடந்த 1987 இல் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான மனதில் உறுதி வேண்டும் எனும் படத்தில் விவேக் ஒரு நடிகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து வெளியான புதுப்புது அர்த்தங்கள் படத்தில் முக்கிய ரோலில் நடித்தார். விவேக்கின் நடிப்பை பார்த்து கே பாலச்சந்தர் இவரை பல முறை பாராட்டியதும் உண்டு. ரஜினி, அஜித், விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
சினிமாவில் நுழைந்த சில வருடங்கள் கடந்த போதிலும் விவேக்கிற்கு பெரிய அளவில் பெயர் கிடைக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து தன் முயற்சியின் மூலம் முன்னேறி தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்தார். கடந்த 1998 இல் அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் திரைப்படம் தான் விவேக்கிற்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து வாலி, குஷி, பிரியமானவளே, மின்னலே, விஸ்வநாதன் ராமமூர்த்தி உள்ளிட்ட படங்களின் மூலம் திரைத் துறையில் தன் பெயரை நிலை நிறுத்தி தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். ஒரு மகத்தான நகைச்சுவை நடிகர் என்ற பெயரையும் தக்க வைத்துக் கொண்டார்.
இவ்வாறு கிட்டத்தட்ட 220க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். விவேக்கின் நகைச்சுவைகளில் பெரும்பாலும் சமூக கருத்துக்கள் நிறைந்திருக்கும். போற போக்கில் நகைச்சுவையின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவார். அந்த வகையில் இவருடைய காமெடிகள் அனைத்தும் லஞ்சம், பெண் சிசுக்கொலை, மூடநம்பிக்கை, சாதி, அரசியல் ஊழல் போன்றவைகளுக்கு எதிராக இருக்கும். இத்தனையையும் ஒரு நகைச்சுவையின் மூலம் மக்களுக்கு புரிய வைத்திருப்பார். குறிப்பாக சாமி படத்தில் ஏழைக் குழந்தைகள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என்பதை கூறினார். கொரோனா காலகட்டத்தில் கூட கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இவ்வாறு தொடர்ந்து மக்கள், மக்கள் என இறுதிவரை ஜனங்களின் கலைஞனாகவே வாழ்ந்து மறைந்தார்.
அதுமட்டுமில்லாமல் இவர் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் சீடனாகவும் நெருங்கிய நண்பராகவும் இருந்து, அவரின் பெயரிலேயே கிரீன் கலாம் என்ற ஒரு திட்டத்தை அமைத்து, தான் இறக்கும் முன் வரை 33 லட்சத்து 23 ஆயிரத்திற்கும் மேலான மரங்களை நட்டு வைத்துள்ளார். இவ்வாறு மக்கள் மத்தியில் பசுமைப் புரட்சியையும் ஏற்படுத்தி சின்ன கலைவாணராக வாழ்ந்து மறைந்த விவேக்கின் பிறந்தநாள் தினத்தில் அவரின் புகழை நினைத்து பெருமை கொள்வோம்.