விஷ்ணு விஷால் நடிக்கும் இரண்டு வானம் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷ்ணு விஷால் கடைசியாக ‘லால் சலாம்’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதன் பின்னர் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஆர்யன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. இது தவிர ஓர் மாம்பழ சீசனில், கட்டா குஸ்தி 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ள விஷ்ணு விஷால் இன்னும் சில படங்களிலும் கமிட் ஆகி வருகிறார். இதற்கிடையில் இவர், ‘ராட்சசன்’ படத்தின் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் இரண்டு வானம் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க திபு நினன் தாமஸ் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொடைக்கானல் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
அதே சமயம் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் நடந்த பேட்டியில் இப்படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர், “இரண்டு வானம் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மமிதா பைஜு இந்த படத்தில் என்னுடன் நடித்திருக்கிறார். இந்த படம் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியாகும். ஆர்யன் படத்திற்கு பிறகு இந்த படம் ரொம்ப ஸ்பெஷலான படமாக இருக்கும். இதன் பிறகு ‘கட்டா குஸ்தி 2’ இருக்கு. மேலும் அருண்ராஜா காமராஜ், பேச்சுலர் படத்தின் இயக்குனர் ஆகியோருடன் அடுத்தடுத்த படங்கள் பண்ணப் போகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


