சங்கமித்ரா படத்தின் ஷூட்டிங் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குனர் சுந்தர் சி தற்போது அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற மே 3ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே சுந்தர் சி இயக்கத்தில் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட திரைப்படம் தான் சங்கமித்ரா. இந்த படத்தில் ஆரம்பத்தில் நடிகர் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், திஷா பதானி போன்றோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் இந்த படம் குறித்த தகவல் எதுவும் வெளிவரவில்லை. தற்போது சங்கமித்ரா படத்தின் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி சமீபத்தில் நடந்த பேட்டியில் இயக்குனர் சுந்தர் சி, (2024) இந்த ஆண்டின் இறுதியில் சங்கமித்ரா படம் தொடங்கும் என கூறியுள்ளார். முதலில் இந்த படத்தை தேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் ஜெயம் ரவி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருவதால் இதில் ஆர்யா மற்றும் பிரித்விராஜ் இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்திருந்தது. இருப்பினும் இதுவரை படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து உறுதி செய்யப்படவில்லை எனவும், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆகவே சங்கமித்ரா படம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.