வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர், ‘அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தன்னுடைய அடுத்தடுத்த படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘மதராஸி’ திரைப்படம் 2025 செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதே சமயம் சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ திரைப்படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இது தவிர இன்னும் சில படங்களில் கமிட் ஆகியுள்ள சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு இயக்கத்திலும் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களது கூட்டணியிலான புதிய படமானது சிவகார்த்திகேயனின் 26ஆவது படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் இந்த படம் சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாக உள்ளதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 அக்டோபர் மாதத்தில் தொடங்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -