சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ திரைப்படம் வெளியானது. சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்த இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, சூரி மற்றும் பலர் நடித்திருந்தனர். கல்லூரி சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. இந்த மாபெரும் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் – சிபி சக்கரவர்த்தி கூட்டணி மீண்டும் இணையப்போவதாக பல தகவல்கள் ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியது.
ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படம் தள்ளிப்போய்க் கொண்டே போகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு முன்பாக சிபி சக்கரவர்த்தி, நானியை வைத்து புதிய படம் பண்ணப்போவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகரவே இல்லை. இந்நிலையில் சிபி சக்கரவர்த்தி – சிவகார்த்திகேயன் கூட்டணியிலான புதிய படம் வருகின்ற நவம்பர் 22 அல்லது 23ஆம் தேதி தொடங்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிவகார்த்திகேயனும் ‘பராசக்தி’ படப்பிடிப்பை முடித்த நிலையில் விரைவில் இந்த புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, ராஷ்மிகா ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
