ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில், அழகு நிலையம் நடத்துவதற்கான உரிமம் வழங்க லஞ்சம் வாங்கிய பெண் உதவி ஆய்வாளர், திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கையும் களவுமாகப் பிடிபட்டார்.![]()
திருமுல்லைவாயல் பகுதியில் அழகு நிலையம் (Beauty Parlor) நடத்துவதற்குத் தேவையான உரிமம் கோரி, பெண் ஒருவர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தை அணுகியுள்ளார். அங்கு உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் அமுல் என்பவர், அந்தப் பெண்ணிடம் உரிமம் பெற்றுத் தருவதற்காக 20,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத அந்தப் பெண், இது குறித்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புப் போலீசார், அந்தப் பெண்ணிடம் ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து அனுப்பி, உதவி ஆய்வாளர் அமுலை கையும் களவுமாகப் பிடிக்கத் திட்டம் தீட்டினர். அதன்படி, காவல் நிலையத்திற்குச் சென்ற அந்தப் பெண், உதவி ஆய்வாளர் அமுலிடம் லஞ்சப் பணத்தை வழங்கினார். பணத்தைப் பெற்றபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து உதவி ஆய்வாளர் அமுலை கையும் களவுமாகப் பிடித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக, உதவி ஆய்வாளர் அமுல் மற்றும் அவருடன் இருந்த மற்றொரு பெண் உதவி ஆய்வாளர் மகாலட்சுமி ஆகியோரை லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் நிலையத்திலேயே பெண் அதிகாரி லஞ்சம் வாங்கியபோது சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
