தாசில்தார் ஜீப்பில் ஜி.பி.எஸ் – அரிசி கடத்தல் கும்பல் கைது
கிருஷ்ணகிரியில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு பறக்கும்படை தாசில்தார் ஜீப்பில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி உளவு பார்த்த அரிசி கடத்தல்காரர் மற்றும் அவருக்கு உதவிய ஜீப் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு தாசில்தாராக இருப்பவர் இளங்கோ. இவர் பயன்படுத்திய அரசு ஜீப்பில் டிரைவராக பணிபுரிந்தவர் கிருஷ்ணகிரி அடுத்த B.C. புதூரை சேர்ந்த சுப்பிரமணி ((வயது59) ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் மாவட்ட ஆட்சியரின் டிரைவராகவும் பணியாற்றியுள்ளார். அங்கிருந்து பணி மாறுதல் செய்யபட்டு பறக்கும்படை தாசில்தார் ஜீப் டிரைவராக இருந்துள்ளார். அப்போது இவருக்கு கிடைக்கும் ரகசிய தகவல்படி அரிசி கடத்தல்காரர்களை பிடிக்க செல்லும் போது அவர்கள் தொடர்ந்து தப்பித்து வந்தனர்.
அரிசி கடத்தல்காரர்களுக்கு எப்படி நாம் வருவது தெரிந்தது என சந்தேகமடைந்த பறக்கும்படை தாசில்தார் இளங்கோ, தன் ஜீப்பை சோதனையிட்டதில், ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளதை கண்டறிந்தார்.
இது குறித்து கடந்த ஜூன் மாதம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல் படி போலீசார் விசாரித்தனர். அதற்குள் பறக்கும்படை தாசில்தாரின் டிரைவர் சுப்பிரமணி பணியிடமாறுதல் பெற்று, கிருஷ்ணகிரி தாசில்தாரின் ஜீப் டிரைவராக சேர்ந்தார்.

போலீசார் விசாரணையில், ஜீப்பில் இருந்த ஜி.பி.எஸ்., கருவி செயல்பாட்டை அரிசி கடத்தலில் ஈடுபட்டு வரும் குருபரப்பள்ளி அடுத்த நடுசாலையை சேர்ந்த தேவராஜ் (வயது33) என்பவர் மொபைலில் தொடர்ந்து பார்த்து வந்தது தெரிந்தது. மேலும் அவர் தாசில்தார் டிரைவாக இருந்த சுப்பிரமணியிடம் அடிக்கடி பேசி வந்ததும் தெரிந்தது.
சம்பந்தப்பட்ட இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்ததில், தேவராஜ் ஜி.பி.எஸ்., கருவியை ஜீப் டிரைவர் சுப்பிரமணியிடம் கொடுத்தது தெரிந்தது. ஜீப்பில் பொருத்தப்பட்ட ஜி.பி.எஸ்., கருவியை தேவராஜ் மொபைலில் பார்த்து அவர் செல்லும் வழியில் அரிசியை கடத்தாமல், மாற்றுபாதையில் கடத்தி வந்ததும் தெரிந்தது.

இதையடுத்து அரிசி கடத்தல் காரர் தேவராஜ், அவருக்கு உதவிய ஜீப் டிரைவர் சுப்பிரமணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில், இவர்களுக்கெல்லாம் பாமக வன்னியர் சங்கத்தை சேர்ந்த பொன்னப்பன் என்பவர் மூளையாக செயல்பட்டதும், மாவட்டம் முழுவதும் அரிசி கடத்தலில் இவருக்கு தொடர்பு இருந்ததும் தெரிந்தது.
இவர் போலீசார், உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளையும் சரிகட்டி வந்ததும், சரிவராத அதிகாரிகள் ஜீப்பில் ஜி.பி.எஸ்., வைத்து உளவு பார்த்ததும் தெரிந்துள்ளது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.