ஈரோட்டில் தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜவுளி சந்தையில், துணி பண்டல்களை திருடிய 3 பெண்கள் கைது.
ஈரோடு ஜவுளி வணிக வளாகத்தில், துணி வாங்க வந்ததை போல் நடித்து ஜவுளி பண்டலை திருடி சென்ற பெண்கள், மீண்டும் கை வரிசை காட்ட வந்த போது வணிகர்களிடம் சிக்கி போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகே மாநகராட்சி வணிக வளாகத்தில் அப்துல் கனி ஜவுளி சந்தை கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு இரு தினங்களுக்கு முன் ஜவுளி வாங்க வந்ததை போல் நடித்த 3 பெண்கள் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான கடையில், ஜவுளி பண்டல் ஒன்றை லாவகமாக திருடி சென்றுள்ளனர்.
மாலையில் வியாபாரம் முடிந்து சந்தேகத்தின் பேரில் இருப்பை சரிபார்த்த போது ஜவுளி பண்டல் ஒன்று காணாமல் போனது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து அங்கிருந்த சிசி டிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் கடைக்கு வந்த 3 பெண்கள் கட்டை பையில் துணிகளை திருடி கொண்டு சென்றது உறுதியாகியுள்ளது. இந்த சிசி டிவி காட்சிகளை சக வணிகர்களுக்கு அனுப்பிய செல்வராஜ், தீபாவளி கூட்ட நெரிசலில் உசாராக இருக்கும் படி அறிவுறுத்தியதுடன், அந்த பெண்கள் வந்தால் தகவல் அளிக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், மறுதினமே (அக்- 23) மீண்டும் ஜவுளி வணிக வளாகத்திற்கு வந்த பெண்கள் இரண்டாவது தளத்தில் உள்ள கடைகளுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த வியாபாரிகள் இந்த பெண்களை கண்டதும் உசாரடைந்து செல்வராஜ் மற்றும் சக வணிகர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வணிகர்கள் ஒன்று சேர்ந்து 3 பெண்களையும் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
ஈரோடு நகர போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணக்கம்பாளையத்தை சேர்ந்த பவித்ரா, கோகிலா மற்றும் சுசீலா என்பதும், இவர்கள் மேலும் சில கடைகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜவுளிகளை திருடி சென்றிருப்பதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து சுமார்15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஜவுளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.