சிதம்பரம் மருத்துவ கல்லூரி வளாகம் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் இறந்த நிலையில் ஆண் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பழைய கொரோனா வார்டு பின்புறம் உள்ள கழிவுநீர் வடிகால் வாய்க்கால் பகுதியில் நேற்று துர்நாற்றம் வீசியது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து இது குறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அந்த கழிவுநீர் வடிகால் வாய்க்காலில் அடைப்பு இருந்ததால், அந்த அடைப்புகளை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது கழிவுநீர் வடிகால் வாய்க்காலில் அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அண்ணாமலை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து, கழிவுநீரில் இறந்து கிடந்தவர் யார், எப்படி இறந்தார், தவறி விழுந்து இறந்தாரா அல்லது யாராவது கொலை செய்துவிட்டு கழிவுநீரில் போட்டுவிட்டு சென்றனரா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.