சீர்காழியில் அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது சிறுமி, 16 சிறுவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், ‘சிறுவனின் முகத்தில் துப்பி அந்த குழந்தையே தவறாக நடந்துகொண்டுள்ளது”’ என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பேசியது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
மயிலாடுதுறையில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் காவல் அலுவலர்களுக்கான போக்சோ சட்டம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு போலீசாருக்கு அறிவுரைகளை வழங்கி பேசினர்.
அப்போது, சீர்காழியில் கடந்த 24-ஆம் தேதி அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது சிறுமி 16 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தலை மற்றும் கண் சிதைக்கப்பட்ட சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேசினார். ”இந்த சம்பவத்தில் அந்தக் குழந்தையே தப்பாக நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு கிடைத்த ரிப்போர்ட்டின் படி அந்த குழந்தை, சிறுவனின் முகத்தில் துப்பியுள்ளது. அதுதான் காரணம்.
எனவே, இரண்டு தரப்பிலும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதுபோன்ற விஷங்களை குழந்தைகளுக்கு சொல்லித்தருவது குறித்து பெற்றோர்களுக்கு உணர வைக்க வேண்டும்” என அவர் பேசினார்.
சர்ச்சை ஏற்படுத்தும் விதத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மூன்றரை வயது சிறுமி சிறுவனின் முகத்தில் துப்பியதுதான் பாலியல் வன்கொடுமைக்கு காரணம் என மாவட்ட ஆட்சியரே பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.