மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் கைது
கோவை கிணத்துக்கடவு அருகே மாமியார் உட்பட இருவரை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி கீரனூரை சேர்ந்தவர் நல்லுசாமி இவரது மனைவி காமாட்சி (37). நல்லுசாமி கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இவர்களுக்கு ஜோதிமணி (27) என்ற மகள் உள்ளார். மகள் ஜோதிமணியை பழனி சேர்ந்த ஆறுமுகம் (27) என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். மேலும் காமாட்சி கடந்த சில மாதங்களுக்கு முன் கோவை கிணத்துக்கடவு கொண்டம்பட்டி பகுதியில் உள்ள ஈஸ்வரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு தங்கி, தேங்காய் உரிக்கும் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் பழனியில் இருந்த ஜோதிமணி மற்றும் அவரது கணவர் ஆறுமுகம் இடையே இரண்டு நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் ஜோதிமணியை தாக்கியுள்ளார். இதனால் கோபித்துக் கொண்ட ஜோதிமணி கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஜோதிமணியை அழைத்துச் செல்ல ஆறுமுகம் கிணத்துக்கடவில் உள்ள மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஜோதிமணியை தாக்கியது குறித்து அவரது தாய் காமாட்சி ஆறுமுகத்திடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காமாட்சியை குத்தி உள்ளார். தடுக்குச் சென்ற வீட்டு உரிமையாளர் ஈஸ்வரனையும் ஆறுமுகம் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதில் படுகாயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கிணத்துக்கடவு போலீசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தப்பிச் சென்ற ஆறுமுகத்தை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பொள்ளாச்சி அருகே பதுங்கி இருந்த ஆறுமுகத்தை கிணத்துக்கடவு போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரை காவல் நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக மாமியார் உட்பட இருவரை மருமகனே கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


