![ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் – வானூர் அருகே பரபரப்பு!](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2023/06/anp.jpg)
வானூர் அருகே காவல் நிலையத்திற்கு கையெழுத்து இட பைக்கில் சென்ற புதுச்சேரியை சேர்ந்த இரண்டு ரவுடிகளை 10 பேர் கொண்ட கும்பல் பின் தொடர்ந்து வந்து ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழிக்கு பலியாக நடந்த இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுவை வில்லியனூர் அடுத்த பிள்ளையார்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அருண். இவருக்கும் வழுதாவூரைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு மோதல் ஏற்பட்டது. அருணை தாக்குவதற்காக வழுதாவறை சேர்ந்த முரளி, கொடாதூறை சேர்ந்த சந்துரு உள்ளிட்ட ஒரு கும்பல் பிள்ளையார் குப்பத்துக்குள் நுழைந்தது. அப்போது பிள்ளையார் குப்பம் அருண் தரப்பினர் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே முரளி மற்றும் சந்துரு ஆகிய இருவரும் இறந்தனர்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் ரவுடி அருண் தன்னை தற்காத்துக் கொள்ள பிரபல ரவுடியான அரியாங்குப்பம் அஸ்வினுடன் தஞ்சமடைந்தார். முரளி, சுந்தர் கொலைக்கு பழிக்கு பலியாக அருணை தீர்த்துக்கட்ட முரளியின் அண்ணன் வழுதாவூர் முகிலன் திட்டம் போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகிழம் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட கோயில் திருவிழாவில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததாக அஸ்வின் அருண் வில்லியனூர் கோர்க்காடு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி அன்பரசன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
![ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் – வானூர் அருகே பரபரப்பு!](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2023/06/anp2.jpg)
அஸ்வின் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அருணும், அன்பரசனும் ஜாமினில் வெளியே வந்தனர். அவர்கள் தினமும் மயிலம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை இருந்ததால் இன்று வழக்கம் போல் ஒரே பைக்கில் பிள்ளையார் குப்பத்தில் இருந்து லிங்காரெட்டி பாளையம் வழியாக மயிலம் காவல் நிலையம் சென்று கொண்டிருந்தனர் அப்பொழுது தமிழகப் பகுதியான செங்கமேடு என்ற இடத்தில் இவர்கள் சென்ற பைக்குக்கு பின்னால் வந்த பத்துக்கு மேற்பட்ட கும்பல் ஆயுதங்களுடன் விரட்டியது. அவர்களது பைக்கை பின்னால் வந்த கும்பல் மோதியதால் அவர்கள் இருவரும் அங்கிருந்த வயலுக்குள் ஓட முயன்றனர். அன்பரசன் சாலை ஓரத்திலேயே விழுந்தார் அவரை அந்த கும்பல் அங்கேயே சரமாரியாக வெட்டி கொலை செய்தது.
சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் ஓடிய அருணை அந்த கும்பல் விடாமல் துரத்திச் சென்று பயங்கர ஆயுதங்களால் தலை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவத்தால் செங்கமேடு பகுதியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது சம்பவம் நடந்த இடத்திற்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.