குடிபோதையில் தகராறு செய்த கணவரை வெட்டிக் கொன்ற மனைவி
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நஞ்சியம்பாளையம் புதூரை சேர்ந்தவர் பாலு . இவருடைய மனைவி ஈஸ்வரி. இவர்கள் இருவரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே நாமக்கல்பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். கூலி தொழிலாளியான பாலுவுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி ஈஸ்வரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் பாலு குடிபோதையில் வீட்டுக்கு வந்த போது கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது ஈஸ்வரியை பாலு தாக்கி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஈஸ்வரி அரிவாளை எடுத்து பாலுவை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் கழுத்து, வாய் ஆகிய பகுதிகளில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பாலு உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னிமலை போலீசார் பாலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஈஸ்வரியை கைது செய்தனர்.