சிவகங்கை மாவட்டம் சதுர்வேதமங்கலத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் இறங்கி மீன்களை பிடித்து அள்ளிச் சென்றனர்.

சிவகங்கை மாவட்டம் சதுர்வேத மங்கலத்தில் உள்ள மங்கள கண்மாய் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த கண்மாயில் வரும் தண்ணீரை கொண்டு அப்பகுதி விவசாயிகள், விவசாயம் செய்து வருகின்றனர்.


தற்பொழுது நெல் அறுவடை நடைபெற்று வரும் நிலையில் கண்மாயில் தண்ணீர் வற்றி வருவதை தொடர்ந்து மங்கள கண்மாயில் மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது. கிராம முக்கியஸ்தர்கள் கொடியசைத்த பின்பு கண்மாய் கரையில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் கொண்டு வந்த கச்சா, தூரி, ஊத்தா, வலைகளை வீசியும் சிலர் லாவகமாக கைகளாலும் நாட்டுவகை மீன்களான கெழுத்தி, குரவை, ஜிலேபி, அயிரை, கட்லா, கெண்டை, விரால் ஆகிய மீன்களை போட்டி போட்டு பிடித்தனர்.

இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர். மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மீன்கள் கிடைத்ததால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.


