ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 24 மணி நேரமும் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க புதிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

1800 425 94890 என்ற இலவச தொடர்பு எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான சிவக்குமார் கூறி அறிவித்துள்ளார்.
சுழற்சி முறையில் 5 பணியாளர்கள் இதில் இருப்பார்கள் என்றும், இங்கு வரும் புகார்களை பறக்கும் படைக்கும், தேர்தல் அதிகாரிக்கும் தெரிவிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
இதேபோல், தேர்தலை கண்காணிக்க நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு இன்று முதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தொகுதி எல்லைகளில் இவர்கள் சுழற்சி முறையில் வாகன தணிக்கையில் ஈடுபடுவார்கள் என அவர் கூறினார்.

50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக ரொக்க பணம் எடுத்து செல்பவர்கள் உரிய ஆவணங்களுடன் எடுத்து செல்லுமாறு அறிவுறுத்திய சிவக்குமார்.
திருமண மண்டபங்களில் கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடத்துபவர்கள் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நிலை கண்காணிப்பு குழுவை தொடர்ந்து பறக்கும் படை அமைக்கப்பட உள்ளதாகவும் தேர்தல் அதிகாரி கூறினார்.


